Saturday 31 August 2024

பூவின் வளர்பருவங்கள்!

பூவின் வளர்பருவங்கள்!

பூவை மலர், அலர், மொட்டு போன்ற பெயர்களால் நாம் அறிவோம். இவை அனைத்தும் பூவின் வளர்பருவங்களைக் குறிக்கும் சொற்கள்.

பூவின் பல்வேறு பருவங்கள்தான் என்ன?

பூவின் வளர்பருவங்கள் குறித்த செய்தியைத் கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் ‘தமிழரும் தாவரமும்’ என்ற நூல் பின்வருமாறு பதிவு செய்கிறது.

பூவின் வளர்பருவங்கள் ஏழாக அறியப்படுகின்றன.

நனை என்பது பூவின் முதல் பருவம். இது பிறப்புப் பருவம்.

அரும்பு என்பது பூவின் இரண்டாவது பருவம்.

முகை என்பது பூவின் மூன்றாவது பருவம்.  பூவின் மணம் வெளிப்படும் பருவம் இதுவாகும்.

போது என்பது பூவின் நான்காவது பருவம். அதாவது முகை திறக்கும் நிலை போது.

மலர் என்பது பூவின் ஐந்தாவது பருவம். பூ விரிந்து காணப்படும் நிலை இதுவாகும்.

அலர் என்பது பூவின் ஆறாவது பருவம். மகரந்த சேர்க்கையும் கருவுறுதலும் நடக்கும் பருவம் இதுவாகும்.

வீ என்பது பூவின் ஏழாவது பருவம். பூக்காம்பிலிருந்து பூ கழன்று விழும் பருவம் இதுவாகும்.

எனினும் இந்த ஏழு நிலைகளும் அனைத்துப் பூக்களிலும் காணப்பட வேண்டும் என்பதில்லை. ஒரு சில பருவங்கள் இல்லாமலும் இருக்கலாம்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூலில் பூவின் பருவங்களுக்குப் பின்வரும் பட விளக்கம் உள்ளது.

ஒப்பீட்டு அளவில் இவ்விரண்டும் சில இடங்களில் மாறுபட்டாலும் தமிழின் வளமையை அறியும் போது வியக்காமல் இருக்க முடியாது.

*****

No comments:

Post a Comment