Saturday, 21 June 2025

உங்கள் ஒழுக்கம்! உங்கள் உயர்வு!

உங்கள் ஒழுக்கம்! உங்கள் உயர்வு!

உங்கள் உளவியலைப் புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இந்த உளவியல் என்பது ஒழுக்கம் சார்ந்தது.

உங்களுடைய ஒழுக்கமே உங்கள் வெற்றிக்குக் காரணமாகிறது. ஒழுங்கற்ற தன்மை உங்களுக்கு வெற்றியைக் கொண்டு வந்தாலும் அது முடிவில் தோல்வியில் கொண்டு போய்தான் விடும். இதற்கு நடைமுறை வாழ்விலிருந்தே இருவரின் உதாரணத்தை நாம் பார்க்கலாம்.

ரொனால்ட் ரீட் என்பவர் சாதாரண எரிவாயு நிலையத்தில் உதவியாளர் பணி பார்த்தார். அவருடைய வருமானம் குறைவு. ஆனாலும் அவர் 8 மில்லியன் டாலர் செல்வத்தைக் குவித்தார். இதற்குக் காரணம் அவர் சிக்கனமாக இருந்ததும், சேமித்த பணத்தைத் தொடர்ச்சியாக முதலீடு செய்து வந்ததும்தான். அவர் முதலீட்டில் நிபுணத்துவம் பெற்றவர் இல்லை. அவர் பின்பற்றிய நிதி சார்ந்த ஒழுக்கம் அவருக்குச் செல்வத்தை உருவாக்கியது.

இதற்கு நேர் மாறான கதை மைக் டைசனுடையது. குத்துச் சண்டை சாதனையாளரான அவர் 400 மில்லியன் டாலர் சம்பாதித்தார். ஆனால் 2003 இல் திவாலானார். காரணம் அவருடைய வரைமுறையற்ற செலவுகள், ஆடம்பரம், மற்றும் மோசமான பண மேலாண்மை ஆகியவைதான். இதனால் மில்லியன்களில் சம்பாதித்தும் மைக் டைசன் வீழ்ச்சி கண்டார்.

ஒருவருடைய பணம் அல்லது அறிவைக் காட்டிலும் பணம் சார்ந்த நடவடிக்கைத்தான் அதாவது ஒழுக்கம்தான் நீண்ட கால நிதி விளைவுகளைத் தீர்மானிக்கிறது. நிதி ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதன் மூலமாக நிதி வெற்றியை அடைய முடியும். வாழ்க்கையில் நிதி என்றில்லை வேறு எதுவாக இருந்தாலும் ஒழுக்கமே உயர்வைத் தீர்மானிக்கிறது. எனவேதான் ஒழுக்கம் உயிரை விட மேலானது என்கிறார் வள்ளுவர்.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.” (குறள், 131)

*****

No comments:

Post a Comment