Saturday, 15 February 2025

உலகைத் திருத்துவதற்கு முன்பாக உன்னைத் திருத்திக் கொள்! - ஓர் எதார்த்தக் கதை!

உலகைத் திருத்துவதற்கு முன்பாக உன்னைத் திருத்திக் கொள்!

-         ஓர் எதார்த்தக் கதை!

அறிவுரைகள் சொல்வது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி.

அந்த அறிவுரைகளைக் கடைபிடிப்பது என்றால் வேப்பெண்ணெய் சாப்பிடுவது மாதிரி.

அறிவுரைகளைப் பொருத்த வரை சொல்பவருக்குக் குஷியாக இருக்கும். கேட்பவருக்கு நசையாக இருக்கும்.

அதனால்தான் திருவள்ளுவர் சொல்கிறார்,

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.” என்று.

இதை விளக்கும்படியான கதை ஒன்றை அறிவோமா?

நண்டுகள் எப்படி நடக்கும் என்பது நமக்கு தெரியும். பக்கவாட்டில்தானே நடக்கும்.

தன் குட்டி நண்டு அப்படி நடப்பதைப் பார்த்த தாய் நண்டு கேட்டது, ஏன் இப்படி பக்கவாட்டில் நடக்கிறாய்? நேராக நடந்தால் குறைந்தா போய் விடுவாய்?

நான் பிறந்ததிலிருந்து இப்படித்தான் நடக்கிறேன். எனக்கு இப்படித்தான் நடக்க வருகிறது என்றது குட்டி நண்டு.

அடப் பாவமே! உன்னை என்ன சொல்வது? உன்னை எப்படி திருத்துவது? என்று அலுத்துக் கொண்டது தாய் நண்டு.

அதற்கு குட்டி நண்டு, கவலைப்படாதே அம்மா. நீ நான் எப்படி நேராக நடக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்தால், அப்படியே நடக்கிறேன் என்று தாயின் கவலையைப் போக்க நினைத்தது.

அப்படி வா வழிக்கு என்று தாய் நண்டு குட்டி நண்டுக்கு நடப்பதைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தது.

அப்போதுதான் அதற்குத் தானும் பக்கவாட்டில் நடப்பது புரிந்தது. இருந்தாலும் தன் குட்டி நண்டுக்கு நேராக நடப்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று முயன்று நேராக நடந்து பார்த்தது.

தாய் நண்டால் நேராக நடக்க முடியவில்லை. நேராக நடக்க முயன்று தலைகுப்புற விழுந்தது.

அது எவ்வளவு முயற்சித்துப் பார்த்தும் நேராக நடக்க முடியவில்லை. அதற்கு மேல் முயற்சிப்பது வீண் என்பது அதற்குப் புரிந்தது.

அது குட்டி நண்டைப் பரிதாபமாகப் பார்த்தது. குட்டி நண்டும் தாய் நண்டைப் பரிதாபமாகப் பார்த்தது.

உனக்கு இப்படித்தான் நடக்க வருகிறது என்றால்அப்படியே நடந்து தொலை என்று கூறி விட்டு தாய் நண்டு பக்கவாட்டில் நகர ஆரம்பித்தது. குட்டி நண்டு அதைப் பின்தொடர ஆரம்பித்தது.

எப்படி இருக்கிறது இந்தக் கதை?

நாம் ஒருவருக்கு அறிவுரை சொல்வதற்கு முன்பாக நாம் அப்படி நடந்து கொள்கிறோமா என்பதை அவதானித்துக் கொள்ள வேண்டும். அப்படி நடக்க முடிந்தால் மட்டுமே நாம் மற்றவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். இல்லையென்றால் அறிவுரை கூறுவதைத் தவிர்ப்பதுதானே நல்லது.

இதைத்தான் நம் முன்னோர்கள், ஊரைத் திருத்துவதற்கு முன்னால் உன்னைத் திருத்திக் கொள் என்று சொன்னார்கள் போலும்.

இக்கதை உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment