Wednesday, 30 April 2025

PFக்கும் ATM கார்டுகள்!

PFக்கும் ATM கார்டுகள்!

விரைவில் வருங்கால வைப்பு நிதி எனப்படும் Provident Fundக்கும் பணஅட்டைகள் (ஏடிஎம் கார்டுகள்) வர இருக்கின்றன. அநேகமாக இவ்வட்டைகள் மே அல்லது சூன் மாதத்திற்குள் வழக்கத்தில் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

EPFO 3.0 எனும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு இத்திட்ட முடிவை அறிவித்துள்ளது.

இதன் நன்மைகளாவன,

1)      இனி பணத்தைப் பெறுவதற்காக விண்ணப்பிக்க வேண்டாம்.

2)      அதிகாரிகளின் ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டாம்.

3)      வைப்பு நிதி பணத்தைப் பெறுவதில் முன்பைப் போல கால தாமதம் ஏற்படாது.

4)      50 விழுக்காடு பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

5)      அவசர பணத்தேவையை உடனடியாகத் தீர்த்துக் கொள்ளலாம்.

இருப்பினும் எந்த நன்மையிலும் சில தீமைகள் இருக்கும்தானே. அப்படி இம்முறையினால் ஏற்படும் தீமைகளாவன,

1)      அவசியமில்லாத தேவைகளுக்குக் கூட இப்பணத்தை எடுத்து அவசர அவசரமாக எடுத்துப் பயன்படுத்த நேரிடலாம்.

2)      வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய சேமிப்பை இடையிடையே எடுத்து செலவழிக்க நேரிடலாம்.

3)      வருங்கால வைப்பு நிதி என்பதால் வருங்காலத்தில் கிடைக்க வேண்டிய கணிசமான நிதியின் அளவு இடையிடையே எடுப்பதால் குறைய நெரிடலாம்.

4)      சேமிப்பை மறந்து நுகர்வுக் கலாச்சாரத்துக்கு மாற இம்முறை வழிவகுக்கலாம்.

5)      தொடர் சேமிப்பின் மீதான அக்கறை குறையலாம்.

வருங்கால வைப்பு நிதிக்கான பண அட்டையைச் சரியாகப் பயன்படுத்துவதும், அநாவசியமாகப் பயன்படுத்துவதும் அதைப் பயன்படுத்துவோர் கையில்தான் இருக்கிறது.

முன்பு வைப்புநிதியைப் பெறுவதில் இருந்த கட்டுபாடுகள், கால தாமதங்கள் ஆகியவை பணஅட்டையைப் பெறுவதால் இருக்கப் போவதில்லை என்பதால் வைப்புநிதிக்கான பணஅட்டையைக் கவனமாகப் பயன்படுத்துவது வருங்காலத்திற்கு நல்லது அல்லவா!

*****

Tuesday, 29 April 2025

ஏழேழ் ஜென்மத்துக்கும் நிம்மதியாக வாழ ஏழு விதமான ஓய்வுகள்!

ஏழேழ் ஜென்மத்துக்கும் நிம்மதியாக வாழ ஏழு விதமான ஓய்வுகள்!

வேலை செய்வது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வதும் முக்கியம். ஓய்வு என்பது நாம் நினைப்பது போல படுத்து உறங்குவது மட்டுமன்று. படுத்து உறங்குவதும் ஓய்வுதான். ஆனால் ஓய்வில் ஏழு வகைகள் உள்ளன. இந்த ஏழு வகை ஓய்வும் ஒரு மனிதருக்குக் கிடைத்தால்தான் அவரால் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ முடியும். ஏழு வகையான ஓய்வுகள் என்னவென்று பார்ப்போமா?

1. உடல் ஓய்வு :

இது உடலியல் ரீதியான ஓய்வு. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நாளில் குறைந்தபட்சம் எட்டு மணி நேர உறக்கம் தேவை. அது இல்லாவிட்டால் அவரால் ஒவ்வொரு நாளையும் புத்துணர்வோடு அணுக இயலாது.

2. மன ஓய்வு :

எதையாவது சதா யோசித்து யோசித்துக் களைத்துப் போகும் மனதுக்கு ஓய்வு வேண்டும். இல்லையென்றால் மனச்சோர்வு என்பது அதிகமாகிக் கொண்டே போகும். மனதை எப்படி ஓய்வெடுக்கச் செய்வது? உடல்ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதான் மன ஓய்வுக்கான சரியான வழி. யோகா, உடற்பயிற்சி, நடனம் போன்றவை எல்லாம் மன ஓய்வுக்கான மார்க்கங்கள். இவற்றைக் கற்றுக் கொள்ள நேரம் இல்லை என்பவர்கள், நீண்ட தூரம் நடக்கலாம். அது கூட மன ஓய்வுக்கான மார்க்கம்தான். அப்போது மூளையில் டோபமைன் சுரந்து மனம் புத்துணர்வு பெறுகிறது.

3. உணர்வு ஓய்வு :

மனிதர்கள் சதா உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இது ஓர் எல்லையைத் தாண்டும் போது மனிதர்கள் வெடித்துச் சிதறுகிறார்கள். அப்படி ஆகாமல் இருக்க என்ன செய்வது? உணர்வு ரீதியான ஓய்வுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்? எப்படி உணர்வுக்கான ஓய்வை மேற்கொள்வது? பயணங்கள்தான் உணர்வு ஓய்வுக்கான சரியான வழியாகும். அவ்வபோது மேற்கொள்ளும் பயணங்களால் உணர்வுகள் நல்ல ஓய்வைப் பெறும். உணர்வுகள் புத்துணர்ச்சி பெறும்.

4. சமூக ஓய்வு :

எப்போதும் குடும்பத்தோடும், தெரிந்த நண்பர்களோடும் இருப்பதே ஒரு கட்டத்தில் சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விடும். இதை எப்படித் தவிர்ப்பது? இதற்குத்தான் சமூக ஓய்வு தேவைப்படுகிறது. சமூக ஓய்விற்கு என்ன செய்ய வேண்டும்? அவ்வபோது சுற்றுலா செல்லுங்கள். உங்களுக்குத் தெரியாத மனிதர்களோடு ஜாலியாக அரட்டை அடியுங்கள். பலநாட்கள் சந்தித்திராத நண்பர்களைத் தேடிச் சென்று சந்தியுங்கள். வெட்டி அரட்டையும், கேளிக்கையும் அவ்வபோது தேவை. ஆனால், எப்போதும் தேவையல்ல. இதுவே சமூக ஓய்வுக்கான மார்க்கம்.

5. படைப்பு ஓய்வு :

நான் என்ன பெரிய ஓவியரா? அல்லது பெரிய எழுத்தாளரா? என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் எதைச் செய்தாலும் அது படைப்புதான். எழுதியதைப் பார்த்து எழுதுவது கூட ஒரு படைப்புதான். அதனால் எதையாவது புதிததாகச் செய்வது மட்டுமே படைப்பு என்று நினைத்து விடாதீர்கள். அன்றாடம் சமைப்பது கூட படைப்புதான். அதையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு அதன் மேல் சலிப்பும் வெறுப்பும் வந்து விடும். இதற்கு என்ன செய்வது? படைப்புக்கும் ஓய்வு வேண்டும். படைப்புக்கு எப்படி ஓய்வு கொடுப்பது? அன்றாடம் செய்து கொண்டிருப்பதை விடுத்து ஒரு நாள் புதிதாக ஒன்றை முயற்சி செய்யுங்கள். புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் படைப்புக்கான ஓய்வு. ஒரே வேலையைத்தொடர்ந்து செய்யாமல் சுழற்சி முறையில் வேலைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.

6. புலன்களுக்கான ஓய்வு :

இந்த நவீன காலத்தில் புலன்களுக்கான ஓய்வு கட்டாயம் தேவைப்படுகிறது. அதென்ன புலன்களுக்கான ஓய்வு? நீங்கள் சதா சர்வ காலமும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அலைபேசியை நோண்டிக் கொண்டிருக்கிறீர்கள், தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், காதில் இசைக்கேட்புக் கருவியைப் பொருத்திக் கொண்டு பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது அலைபேசியிலோ, கணினியிலோ எதையாவது விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் உங்கள் கண்கள், காதுகள் என்று புலன்கள் சதா சர்வ காலமும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவை அவற்றுக்கு ஒரு களைப்பைக் கொடுக்கின்றன. இதனால்தான் புலன்களுக்கான ஓய்வு என்பது தேவைப்படுகிறது. ஆகவே வாரத்தில் ஒரு நாளாவது அலைபேசியில்லாத நாள், தொலைக்காட்சி பார்க்காத நாள், கணினியைக் கையாளாத நாள் என்று ஓய்வை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இந்த ஓய்வு உங்களை பன்மடங்கு மேம்படுத்தும் என்பதை இந்த ஓய்வை அனுபவித்த பிறகு நன்றாக உணர்வீர்கள்.

7. ஆன்ம ஓய்வு :

பல வித எண்ணங்களால் சீரற்று அலைக்கழிக்கப்படும் மனதுக்கு ஆன்ம ஓய்வு என்பது தேவைப்படுகிறது. தியானம் ஆன்ம ஓய்வுக்கான அற்புதமான வழிமுறையாகும். எதையாவது ஓர் ஒழுங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதை ஒரு மாதம் அல்லது 48 நாட்கள் செய்வது கூட ஆன்ம ஓய்வுக்கான அற்புதமான வழிமுறையாகும். உதாரணத்துக்கு ஒரு பக்க அளவில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நற்பண்புகளை எழுதி வைத்துக் கொண்டு அதை 48 நாட்களுக்குத் தினமும் காலையில் எழுந்தவுடன் சொல்வது உங்கள் மனதுக்கு நல்ல ஆன்ம ஓய்வைக் கொடுக்கும். இது தவிர விரதம் இருப்பது, ஆன்மிகப் பயணம் செல்வது, ஆண்டுக்கு ஒரு முறை புனித யாத்திரை மேற்கொள்வது போன்றவையும் கூட ஆன்ம ஓய்வுகளே.

மேற்படி ஏழு விதமான ஓய்விலும் கவனம் செலுத்தி, இவ்வகை ஓய்வுகளைப் போதுமான அளவில் எடுத்துக் கொண்டால் உங்கள் மனதும் உடலும் ஆன்மாவும் புத்துணர்வோடு இருக்கும். நீங்களும் உங்களை தினந்தோறும் புதிய மனிதராக உணர்வீர்கள்.

ஏழு ஓய்வுகளையும் பெற்று ஏழேழு ஜென்மமும் மகிழ்ச்சியாகவும் நலமாகவும் வளமாகவும் வாழ வாழ்த்துகள்!

*****

எம்.பி.க்கள் அனுபவிக்கும் பலன்கள் என்னவென்று அறிவீர்களா?

எம்.பி.க்கள் அனுபவிக்கும் பலன்கள் என்னவென்று அறிவீர்களா?

2023 – 24 ஆம் ஆண்டு பொருளாதாரத் தரவுகளின் படி இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் 1.72 லட்சம் ஆகும். இதுவே மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.க்களின் ஆண்டு வருமானம் 30.48 லட்சம் ஆகும். இது தனிநபர் ஆண்டு வருமானத்தை விட 17 மடங்கு ஆகும்.

விசயம் இத்தோடு முடிந்து விடவில்லை. எம்.பி.க்களின் வருமானத்தை இத்தோடு குறுக்கி விட முடியாது எனக்கும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் நினைப்பது போல அவர்களுக்கான பிற வருமானங்களைக் கணக்கிடவே முடியாது என்பது உண்மைதான் என்றாலும், கணக்கிடக் கூடிய அரசு வழங்கும் சலுகை வருமானங்கள் இருக்கின்றன. அதைப் பார்ப்போம்.

எம்.பி.க்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவம்.

டெல்லியில் அவர்களுக்கு இலவச வீடு அல்லது வீட்டு வாடகைப்படியாக மாதந்தோறும் இரண்டு லட்சம்.

எம்.பி.க்களுக்கு மாதந்தோறும் 5000 யூனிட் இலவச மின்சாரம்.

எம்.பி.க்களுக்கு மாதந்தோறும் 4000 கிலோ லிட்டர் குடிநீர் இலவசம்.

எம்.பி.க்களுக்கு இலவச தொலைபேசி மற்றும் இணைய வசதி.

எம்.பி.க்கள் அவர்களது குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு 34 இலவச விமான பயண வசதி.

எம்.பி.க்களுக்கு தொடர்வண்டியில் முதல் வகுப்பு பிரயாண வசதி எப்போதும் இலவசம். ஆனால் மூத்த குடிமக்களுக்கு தொடர்வண்டிப் பயணச்சீட்டுக் கட்டணத்தில் வழங்கப்படும் சலுகைக் கூட ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு.

தொகுதிக்குள் அவர்கள் சுற்றுப்பயணம் சென்றால் அதற்கான பயணப்படி.

மேசை, நாற்காலி போன்ற பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக 1 லட்சம் ரூபாய்.

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக 25 ஆயிரம் ரூபாய்.

இந்தியாவில் வேறு யாருக்கும் ஓய்வூதியம் உண்டோ இல்லையோ இவர்களுக்கு 31 ஆயிரம் ஓய்வூதியம்.

அதுவே ஒருவர் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி ஆகிய இரண்டு பதவிகளையும் வகித்திருந்தால் இரட்டை ஓய்வூதியம்.

இவ்வளவு சலுகைகள் வழங்கும் நம்முடைய எம்.பி.க்களின் இன்னொரு முகத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய 543 எம்.பி.க்களில் 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். அதாவது 504 பேர் கோடீஸ்வரர்கள். அவர்களுக்குத்தான் இவ்வளவு ஊதிய, ஓய்வூதியப் பயன்களும் அத்துடன் இவ்வளவு சலுகைகளும்.

இவ்வளவையும் வாங்கிக் கொண்டு அவர்கள் அவையில் என்ன செய்கிறார்கள்? ஒன்று தூங்கி வழிகிறார்கள் அல்லது கைபேசியில் நீலப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்னத்தைச் சொல்வது என்கிறீர்களா?

அதுதான் எனக்கும் தெரியவில்லை. யாருக்கும் தெரியவில்லை.

*****

Monday, 28 April 2025

தொடர்வண்டி கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம்?

தொடர்வண்டி கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம்?

இதற்கான காரணத்தைக் கண்டறிய நாம் சில தரவுகளை அலச வேண்டும்.

2019 – 20 தரவுகளின்படி தொடர்வண்டியில் குளிர்சாதனப் பெட்டிகளில் பயணம் செய்தோரின் எண்ணிக்கை 18 கோடி மட்டுமே. ஆனால் முன்பதிவில்லாமல் சாதாரண பெட்டிகளில் பயணம் செய்தோரின் எண்ணிக்கை 790 கோடி. இந்த ஒரு தகவல் போதும் ஏன் தொடர்வண்டிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்கு.

தற்போதைய தொடர்வண்டிகளில் குளிர்சாதன மற்றும் முன்பதிவு பெட்டிகள்தான் அதிகம் இருக்கின்றன. அவற்றில் முன்பதிவு செய்யாதோருக்கான பெட்டிகள் மிகவும் குறைவாக இருக்கின்றன. இப்பெட்டிகள் ஒவ்வோராண்டும் குறைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இதையும் நீங்கள் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான தரவுகளைக் கொண்டு பார்க்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது. அத்தரவுகளின்படி குளிர்சாதனப் பெட்டிகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 18 கோடியிலிருந்து 36 கோடியாக அதாவது இரு மடங்காக ஆகியிருக்கிறது.

ஏழைகளும் அன்றாடங் காய்ச்சிகளும் அவர்கள் மாதந்தோறும் சம்பாதிக்கும் பத்தாயிரம் அல்லது பதினைந்தாயிரத்திற்குள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிப்பதுதான் கட்டுபடியாகும். ஆனால் தொடர்வண்டி நிர்வாகங்கள் அவர்களுக்கான பெட்டிகளைக் குறைப்பதிலேயே குறியாக இருக்கிறது. அனைவரையும் அதிகம் செலவு செய்து முன்பதிவு பெட்டிகளில் பயணிக்க வைக்கவே பிரயாணிக்கப்படுகிறது.

முன்பதிவு பெட்டிகளின் நிலைமையையும் அறியாதா என்ன? பணம் இருந்தாலும் ஒரு வாரத்திற்கு முன்பாகப் பதிவு செய்தால் மட்டுமே இடம் கிடைக்கும் என்கிற நிலைதான் இருக்கிறது.

தொடர்வண்டி நிர்வாகங்கள் முன்பதிவில்லாத பெட்டிகளை அதிகரித்து, அத்துடன் முன்பதிவு செய்வோருக்கும் இடம் கிடைப்பதை உறுதி செய்தால் நெரிசல்கள் இல்லாத தொடர்வண்டி பயணங்கள் சாத்தியமே.

*****

Saturday, 26 April 2025

வினா எழுத்துகள் அறிவோமா?

வினா எழுத்துகள் அறிவோமா?

வினவுவதற்குப் பயன்படும் எழுத்துகள் வினா எழுத்துகள்.

“அவ்வெழுத்துகள் யாவை?” என வினவ உதவும் ‘யாவை’ என்ற வினாச் சொல்லில் இடம் பெறும் முதல் எழுத்தான யா என்பது வினா எழுத்துகளுள் ஒன்று. மற்ற வினா எழுத்துகள் யாவை என்றால், எ, ஏ, ஆ, ஓ என்பன.

ஆக எ, ஏ, ஆ, ஓ, யா ஆகிய ஐந்து எழுத்துகளும் வினா எழுத்துகள் ஆகும்.

அகச்சுட்டு, புறச்சுட்டு என்பது போல சொல்லிருந்து பிரிக்க முடியாத வினா எழுத்துகள் அகவினா எனவும், இரு சொற்களாகப் பிரிக்கக் கூடிய வகையில் வரும் வினா எழுத்துகள் புற வினா எனவும் அழைக்கப்படுகின்ன.

எவன், ஏன், யாது எனும் வினாச்சொற்களில் எ, ஏ, யா எனும் வினா எழுத்துகள் அகவினா ஆகும்.

எப்பையன், யாங்கனம், அவனே, அவனா, அவனோ எனும் வினாச்சொற்களில் இடம் பெறும் எ, யா, ஏ, ஆ, ஓ எனும் வினா எழுத்துகள் புறவினா ஆகும். ஏனெனில் எப்பையன் என்பதை எ + பையன் எனவும், யாங்கனம் என்பதை யாங்கு + அனம் எனவும், அவனே என்பதை அவன் + ஏ எனவும், அவனா என்பதை அவன் + ஆ எனவும், அவனோ என்பதை அவன் + ஓ எனவும் பிரித்து எழுதலாம் என்பதால் புற வினா ஆகும்.

இதனின்று எ, யா எனும் வினா எழுத்துகள் அக வினாவாகவும் புற வினாவாகவும் வரும் எனத் தெளியலாம்.

‘ஏ’ எனும் வினா எழுத்து வினாச்சொல்லின் முதலில் வரும் போது அக வினாவாகவும், வினாச்சொல்லின் இறுதியில் வரும் போது புற வினாவாகவும் வரும் என அறியலாம். ‘ஏ’ வினாச்சொல்லின் இறுதியில் புற வினாவாக வருவது தற்போது வழக்கில் இல்லை.

ஆ, ஓ எனும் வினா ழுத்துகள் வினாச்சொல்லின் இறுதியில் புற வினாவாக வரும்.

சுட்டெழுத்துகளைப் போல வினா எழுத்துகள் ஐம்பாலிலும் வரும்.

எ என்ற வினா எழுத்தை எடுத்துக் கொண்டால்,

எவன்?

எவள்?

எவர்?

எது?

எவை?

என ஐம்பாலிலும் வரும். இது போல மற்ற வினா எழுத்துகளையும் ஐம்பாலிற்கும் எழுதிப் பாருங்களேன்!

*****

Friday, 25 April 2025

ஒடுக்கப்பட்டோர் கல்வியின் பிதாமகர் பாவ்லோ பிரெய்ரெ!

ஒடுக்கப்பட்டோர் கல்வியின் பிதாமகர் பாவ்லோ பிரெய்ரெ!

பாவ்லோ பிரெய்ரெ பிரேசிலியக் கல்வியாளர் ஆவார்.

இவர் 19 செப்டம்பர், 1921 இல் பிரேசிலில் பிறந்தார்.

1930 இல் உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார பெருமந்தத்தில் வறுமையாலும் பட்டினியாலும் பாதிக்கப்பட்டவர்களுள் பிரெய்ரெரும் ஒருவர். அதனால் வறுமை இவரது மிகச் சிறந்த அனுபவ பள்ளிக்கூடமாக ஆனது.

வறுமையின் காரணமாக நான்கு ஆண்டுகள் பிரெய்ரெயின் கல்வி தடைபட்டது. இந்த நான்கு ஆண்டுகளும் அவர் குடிசைவாழ் சிறுவர்களோடு நன்கு கலந்து பழகி கால்பந்து விளையாடினார். இக்காலகட்டமே அவருக்குக் கல்வி குறித்து பலவிதமான புரிதல்களைப் பிற்காலத்தில் வழங்கியது.

பால்லோ பிரெய்ரெ சட்டம் பயின்று வழக்கறிஞரானார். ஆனால் அவர் வழக்கறிஞர் பணியாற்றாமல், ஆசிரியர் பணியாற்ற பெரிதும் விரும்பினார்.

பிரெய்ரெயின் கருத்துப்படி கற்றல் என்பது வேறு, படிப்பு என்பது வேறு. அனுபவமே தமக்கு அறிவுக்கும் வர்க்கத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்த்தியது என்கிறார்.

இன்றைய கல்வி முறையை அவர் வங்கிக் கல்வி முறை என்று சாடுகிறார். வங்கியில் பணத்தை முதலீடு செய்வது போல, ஆசிரியர் மாணவரின் தலையில் தகவல்களை இட்டு நிரப்புவதாகப் பிரெய்ரெ கருதுகிறார்.

1967 இல் Education as the Practice of Freedom என்ற நூலைப் பிரெய்ரெ வெளியிட்டார். இந்நூலில் இன்றைய கல்வி முறையானது ‘எடுத்துச் சொல்லுதல்’ என்ற நோயால் அவதிப்படுவதாகப் பிரெய்ரெ கூறுகிறார். பாடப்பொருளானது மாணவர்களின் அனுபவ அறிவிற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. அதனாலேயே கல்வி என்பது வன்முறையாக மாறுகிறது என்பது பிரெய்ரெயின் கருத்தாகும்.

மேலும் கல்விமுறையில் ஆசிரியர்கள் உயிர்க்கூறாகவும், மாணவர்கள் வெறுமனே பொருள்கூறாகவும் கருதப்படுகின்றனர் என்றும் கூறுகிறார். இதனால் மாணவர்கள் அறிவைச் சேமித்து வைக்கும் கிடங்காய்க் கருதப்படுவதாகவும் கூறுகிறார்.

இதற்கு மாற்றாகக் கலந்துரையாடல் முறையைப் பாவ்லோ பிரெய்ரெ வலியுறுத்துகிறார். பிரச்சனை அடிப்படையிலான கல்வி முறை இவரது சாராம்சமாகும். அதன்படி ஒரு பிரச்சனையை எடுத்துக் கொண்டு அதற்கான தீர்வை ஆசிரியர் மாணவர் இருவரும் இணைந்து தேடும் முறையை அவர் முன்னிருத்தினார்.

1968 இல் Pedagogy of the Oppressed என்ற நூலை வெளியிட்டார். இந்நூல் உலக அளவில் பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக பல நாடுகள் எழுத்தறிவுச் சட்டங்களை இயற்றின. ஆனால் இந்நூல் அவரது நாடான பிரேசிலில் 1974 வரை தடை செய்யப்பட்ட நூலாக அந்நூல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணித்து ஒடுக்கப்பட்டோல் கல்வி மேம்படவும், கல்வி ஜனநாயகப்படவும் பிரெய்ரெ துணை நின்றார்.

தனது 75 ஆவது வயதில் 2 மே, 1997 அன்று பிரெய்ரெ மாரடைப்பால் காலமானார். அவர் கல்வி குறித்து எழுதியுள்ள 17 நூல்கள் அவரைக் காலம் முழுவதும் நினைவில் வைத்திருக்கும்.

*****

Thursday, 24 April 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (25.04.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (25.04.2025)

1) கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் சூன் 2 ஆம் தேதி திறக்கப்படும்.

2) பருவ விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் சூன் 16 ஆம் தேதி திறக்கப்படும்.

3) கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் எனத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

4) முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் தயாரிப்புக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

5) பகல்ஹாம் தாக்குதலைத் தொடர்ந்து ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்து இந்தியா திரும்பினார்.

6) ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 42 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் கண்டறிந்துள்ளது.

7) சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா மீறினால் இந்தியா மீது போர் தொடுக்க உள்ளதாகப் பாகிஸ்தான் அச்சுறுத்தியுள்ளது.

8) பாகிஸ்தான் ஏவுகணை சோதனைக்குத் தயாராகி வருகிறது.

9) பாகிஸ்தான் அரசின் எக்ஸ் தள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

Education & GK News

1) Schools will reopen on June 2 after the summer vacation.

2) Colleges will reopen on June 16 after the summer vacation.

3) The Tamil Nadu Chief Minister has announced that a university will be set up in Kumbakonam in the name of Karunanidhi.

4) The Tamil Nadu government has ordered a one-year ban on the production of mayonnaise made from eggs.

5) Rahul Gandhi has canceled his US trip and returned to India following the Pahalgam attack.

6) The Indian Army has found 42 terrorist camps in occupied Kashmir.

7) Pakistan has threatened to wage war on India if India violates the Indus River Treaty.

8) Pakistan is preparing for missile tests.

9) The Pakistani government's X-site page has been blocked in India.

Wednesday, 23 April 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (24.04.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (24.04.2025)

1) ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

2) பகல்ஹாம் தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியா பயணத்தை ரத்து செய்து விட்டு பிரதமர் நாடு திரும்பினார். நாட்டின் பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் அவரச ஆலோசனை நடத்தினார்.

3) தாக்குதல் நடைபெற்ற இடத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று ஆய்வு செய்தார். உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார்.

4) இந்திய குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

5) இந்திய குடிமைப் பணித் தேர்வில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே முதலிடம் பிடித்துள்ளார்.

6) இந்திய குடிமைப் பணித் தேர்வில் தமிழக அளவில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் முதலிடம் பிடித்துள்ளார்.

7) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்வது குறித்து முதல்வர் உரிய நேரத்தில் முடிவெடுப்பார் என சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8) நியாய விலைக் கடைகள் முன் நிழற்கூரைகள் அமைக்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

9) போப் பிரான்சிஸ்க்கான இறுதிச் சடங்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 26) நடைபெறுகிறது.

10) நடப்பாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி அமைப்பு கணித்துள்ளது.

11) சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Education & GK News

1) 26 tourists were killed in a terrorist attack in Pahalgam, Jammu and Kashmir.

2) The Prime Minister returned to the country after canceling his trip to Saudi Arabia following the Pahalgam attack. He held an emergency meeting with top officials regarding the country's security.

3) Home Minister Amit Shah personally inspected the attack site. He paid tribute to the deceased.

4) 57 people from Tamil Nadu have qualified in the IAS Examination.

5) Shakti Dubey from Uttar Pradesh has topped the IAS Examination.

6) Sivaschandran, who trained under Naan Mulkhavan scheme, has topped the IAS Examination in the Tamil Nadu-level.

7) It has been informed in the Assembly that the Chief Minister will take a decision on the implementation of the old pension scheme for government employees and teachers at the appropriate time.

8) Food Minister Chakrabarni has said that shade canopies will be set up in front of fair price shops.

9) The funeral of Pope Francis will take place the day after tomorrow (April 26).

10) The International Monetary Fund has predicted that India's economic growth will be 6.2 percent this year.

11) The film Retro, starring Suriya and directed by Karthik Subbaraj, will be released in theaters on May 1.

Tuesday, 22 April 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (23.04.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (23.04.2025)

1) தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. சவரனுக்கு ஒரே நாளில் 2,200 ரூபாய் உயர்ந்து 74 ஆயிரத்தைக் கடந்தது.

2) பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் வார விழாவாக ஏப்ரல் 29 முதல் மே 5 வரை கொண்டாடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

3) நாளை மறுநாள் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் நடைபெற உள்ளது.

4) கடந்த நிதி ஆண்டில் டாஸ்மாக் மூலமாகத் தமிழக அரசுக்கு 48,344 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

5) அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு நாடு நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

6) இரண்டு நாள் அரசு முறை பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா சென்றடைந்தார்.

7) இந்தியாவில் 30 கோடி மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

Education & GK News

1) Gold prices have skyrocketed. Sovereign rose by Rs 2,200 in a single day to cross Rs 74,000.

2) The Tamil Nadu government has announced that Bharathidasan's birthday will be celebrated as a Tamil week festival from April 29 to May 5.

3) The day after tomorrow, a Vice-Chancellors' Conference will be held in Ooty under the chairmanship of Governor R.N. Ravi.

4) The Tamil Nadu government received an income of Rs 48,344 crore through TASMAC in the last financial year.

5) US Vice President JD Vance met Prime Minister Narendra Modi and held discussions on bilateral relations and cooperation.

6) Prime Minister Narendra Modi reached Saudi Arabia on a two-day official visit.

7) 30 crore people in India are at risk of being affected by an earthquake.

Monday, 21 April 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (22.04.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (22.04.2025)

1) கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 88.

2) அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார்.

3) ஜம்மு காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.

4) நிகழாண்டில் மாம்பழ மகசூல் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

5) மதிமுகவின் முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகும் முடிவைத் திரும்பப் பெற்றார் துரை வைகோ.

6) தமிழ்நாட்டின் வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7) மின்னல் வேகத்தில் இணைய சேவையை வழங்கும் 10 ஆவது தலைமுறை அலைபேசி சேவையைச் சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

8) பெல்ஜியத்தில் நடந்த மகிழ்வுந்து பந்தயப் போட்டியில் நடிகர் அஜித்குமாரின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

9) ஒரு சவரன் தங்க நகையின் விலை 72 ஆயிரத்தைக் கடந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ஒன்பதாயிரத்தைக் கடந்தது.

Education & GK News

1) Pope Francis, the head of the Catholic Church, passed away due to ill health. He was 88.

2) US Vice President JD Vance arrived in India yesterday on a four-day official visit.

3) 3 people died due to heavy rains in Jammu and Kashmir's Ramban district.

4) Mango yield has increased by 10 percent this year.

5) Durai Vaiko has withdrawn his decision to resign as the general secretary of MDMK.

6) The temperature in Tamil Nadu is likely to increase further, the Meteorological Department has said.

7) China has introduced 10G mobile phone service that provides fast internet service.

8) Actor Ajith Kumar's team has set a record by coming second in a car racing competition held in Belgium.

9) The price of a sovereign gold jewelry has crossed 72 thousand. The price of one gram of gold has crossed nine thousand.

Sunday, 20 April 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (21.04.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (21.04.2025)

1) தமிழில் மருத்துவக் கல்வியை வழங்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியின் தெரிவித்துள்ளார்.

2) முதுகலை ஆசிரியர்களுக்கு மே 5 முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

3) கலைஞர் கைவினைத் திட்டத்தைத் தமிழக முதல்வர் குன்றத்தூரில் சனிக் கிழமையன்று தொடங்கி வைத்தார்.

4) அரசு ஊழியர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிட இனி அனுமதி பெற தேவையில்லை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

5) நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களுக்கு இனி அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்கப்பட உள்ளன.

6) தமிழகத்தில் எட்டு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாகப் பதிவாகியது. வேலூரில் அதிகபட்சமாக 104.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது.

7) குலசேகரன்பட்டினத்திலிருந்து இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஏவூர்திகள் (ராக்கெட்டுகள்) ஏவப்படும் என இந்திய வானியல் ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

8) சென்னையின் முதல் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட புறநகர் தொடர்வண்டி போக்குவரத்து சனிக்கிழமையன்று தொடங்கப்பட்டது.

9) இந்தியாவின் தங்க இறக்குமதி மார்ச் மாதத்தில் 192 சதவீதம் அதிகரித்தது.

10) பெல்ஜியத்தில் நடைபெற்ற மகிழ்வுந்து (கார்) பந்தயப் பயிற்சியின் போது நடிகர் அஜித்குமார் விபத்தில் சிக்கினார். எனினும் காயமின்றி அவர் விபத்திலிருந்து தப்பித்தார்.

11) திருமணத்தில் தமக்கு நம்பிக்கையில்லை எனவும், அது குறித்து தமக்கு எந்த யோசனையும் இல்லை எனவும் நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

Education & GK News

1) Health Minister M. Subramani has said that the move to provide medical education in Tamil will be taken up soon.

2) Skill development training will be provided to postgraduate teachers from May 5.

3) The Tamil Nadu Chief Minister launched the Kalaignar Craft Scheme in Kundrathur on Saturday.

4) The Tamil Nadu government has announced that government employees will no longer need to obtain permission to write and publish books.

5) Printed receipts will now be issued for goods sold at fair price shops.

6) Temperatures in eight places in Tamil Nadu exceeded 100 degrees Fahrenheit. Vellore recorded the highest temperature of 104.9 degrees Fahrenheit.

7) The Indian Space Research Organisation (ISRO) has said that rockets will be launched from Kulasekarapatnam in the next two years.

8) Chennai's first air-conditioned suburban train service was launched on Saturday.

9) India's gold imports increased by 192 percent in March.

10) Actor Ajith Kumar met with an accident during a car racing practice in Belgium. However, he escaped unhurt.

11) Actress Trisha says that she has no idea in marriage.

Saturday, 19 April 2025

எழுத்து எனப்படுவது…

எழுத்து எனப்படுவது

எப்படி அணுவே பொருளின் அடிப்படையோ,

செல்லே உயிர்களின் அடிப்படையோ,

அப்படியே எழுத்தே மொழியின் அடிப்படை.

தமிழ் எழுத்துகள் மொத்தம் 247.

இவற்றுள்,

உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18. இவையிரண்டும் முதல் எழுத்துகள் எனப்படுகின்றன.

உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.

அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழும் நெடில்.

மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

க,ச,ட,த,ப,ற ஆகிய எழுத்துகளுக்கு புள்ளிகளிட்டால் அவை வல்லினம்.

ங,ஞ,ண,ந,ம,ன ஆகிய எழுத்துகளுக்குப் புள்ளிகளிட்டால் அவை மெல்லினம்.

ய,ர,ல,வ,ழ,ள ஆகிய எழுத்துகளுக்குப் புள்ளிகளிட்டால் அவை இடையினம்.

உயிர்மெய் எழுத்து 216, ஆய்த எழுத்து 1. இவையிரண்டும் சார்பெழுத்துகள் எனப்படுகின்றன.

எழுத்துகளை ஒலிப்பின் அடிப்படையில் குறில், நெடில், ஒற்று எனப் பிரிப்பர்.

குற்றெழுத்து ஒரு மாத்திரை அளவினது.

நெட்டெழுத்து இரு மாத்திரை அளவினது.

ஒற்றெழுத்து அரை மாத்திரை அளவினது.

சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.

அவையாவன,

1. உயிர்மெய்,

2. ஆய்தம்,

3. உயிரௌபெடை,

4. ஒற்றளபெடை,

5. குற்றியலுகரம்,

6. குற்றியலிகரம்,

7. ஐகாரக் குறுக்கம்,

8. ஔகாரக் குறுக்கம்,

9. மகரக் குறுக்கம்,

10. ஆய்தக் குறுக்கம்.

எழுத்துகள் சேர்ந்து சொற்கள் பிறக்கின்றன. எழுத்துகள் இணைந்து உருவாகும் சொற்கள் பொருள் தர வேண்டும்.

சொற்களை ஓரெழுத்துச் சொற்கள், ஈரெழுத்துச் சொற்கள், மூவெழுத்துச் சொற்கள், நான்கெழுத்துச் சொற்கள் என எழுத்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகை பிரிக்கலாம்.

பூ, ஈ என்பன ஓரெழுத்துச் சொற்கள்.

கல், மண் என்பன ஈரெழுத்துச் சொற்கள்.

தமிழ், அழகு என்பன மூவெழுத்துச் சொற்கள்.

எழுத்து, எண்ணம் என்பன நான்கெழுத்துச் சொற்கள்.

*****