Friday, 4 April 2025

காளைச் சந்தையும் கரடிச் சந்தையும்!

காளைச் சந்தையும் கரடிச் சந்தையும்!

பங்குச் சந்தை ஒன்றுதான். அதில் இரண்டு விதமான சந்தைகள் இருப்பதாகக் கூறுவார்கள். ஒன்று காளைச் சந்தை. மற்றொன்று கரடிச் சந்தை. முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் சந்தையைக் காளைச் சந்தை என்பார்கள். பின்னோக்கி விழுந்து கொண்டிருக்கும் சந்தையைக் கரடிச் சந்தை என்பார்கள்.

இந்த இரண்டுச் சந்தையிலும் என்ன நடக்கும்?

இவ்விரு சந்தையிலும் முதலீட்டாளர்களும், பங்கு வர்த்தகர்களும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை இங்கே காண்போம்.

காளைச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாக நினைத்துக் கொள்கிறார்கள். அதே நேரத்தில், கரடிச் சந்தையில் தங்களுக்கு அதிர்ஷ்டமில்லை என்று புலம்புகிறார்கள்.

காளைச் சந்தையில் பங்குகளை முக்கியமான சொத்துகள் என்பவர்கள், கரடிச் சந்தையில் பங்குச் சந்தையைத் சூதாட்டக் களமாகக் கூறுகிறார்கள்.

காளைச் சந்தையில் சந்தையின் சிறப்பான செயல்பாட்டுக்குத் தானே காரணம் என ஆளும் அரசு சொல்லும். கரடிச் சந்தையில் சந்தை வீழ்ச்சிக்குக் காரணம் சர்வதேச காரணங்கள் என்று சொல்லும்.

காளைச் சந்தையில் பங்குகளை வாங்குபவர்கள் மட்டுமே இருப்பார்கள். கரடிச் சந்தையில் பங்குகளை விற்பவர்கள் மட்டுமே இருப்பார்கள்.

காளைச் சந்தையில் எல்லாரும் தங்களை நீண்ட கால முதலீட்டாளர்கள் என்பார்கள். கரடிச் சந்தையில் அப்படி சொன்னவர்களைக் காண முடியாது.

காளைச் சந்தையின் போது பலவித விருந்துகள் நடக்கும். கரடிச் சந்தையில் சிங்கிள் டீக்கே சிங்கிஅடிக்கும் நிலை காணப்படும்.

காளைச் சந்தையில் அதிக விலை கொடுத்து பங்குகளை வாங்குவார்கள். கரடிச் சந்தையில் குறைந்த விலை என்றாலும் பங்குகளை வாங்க மாட்டார்கள்.

காளைச் சந்தையில் இரட்டை இலக்கத்தில் லாப சதவீதம் இருக்கும். கரடிச் சந்தையில் இரட்டை இலக்கத்தில் நட்ட சதவீதம் இருக்கும்.

காளைச் சந்தையில் கடன் வாங்கியாவது முதலீடு செய்வார்கள். கரடிச் சந்தையில் கையில் காசு இருந்தாலும் முதலீடு செய்ய மாட்டார்கள்.

இப்படித்தான் இரவு – பகல், இன்பம் – துன்பம், பிறப்பு – இறப்பு என்பது போல பங்குச் சந்தையில் காளைச் சந்தையும் கரடிச் சந்தையும் இரண்டு துருவங்களாக இருக்கின்றன. இதை நன்கு புரிந்து கொள்பவர்கள் பங்குச் சந்தையில் நீடித்து நிற்கிறார்கள். புரிந்து கொள்ளாமல் தவிப்பவர்கள் பங்குச் சந்தையால் பாதிக்கப்பட்டு விடுகிறார்கள்.

*****

No comments:

Post a Comment