Friday, 11 April 2025

சார்லி மங்கரின் முதலீட்டு உத்திகள்!

சார்லி மங்கரின் முதலீட்டு உத்திகள்!

யாரிந்த சார்லி மங்கர்?

சார்லி மங்கரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் வாரன் பப்பெட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

உன் நண்பனைப் பற்றிச் சொல், நீ யார் என்பதைச் சொல்கிறேன் என்கிற கதைதான் இது.

வாரன் பப்பெட் பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் பில்லியன்களைக் குவித்த முதலீட்டுப் பிதாமகன். முதலீட்டின் மூலமாகவும் ஒருவர் உலக மகா கோடீஸ்வரர் ஆக முடியும் என நிரூபித்தவர்.

வாரன் பப்பெட்டின் உற்ற தோழர், முதலீட்டு ஆலோசகர், முதலீட்டுக் கூட்டாளி என்று வாரன் பப்பெட்டின் சகலமாகவும் இருந்தவர்தான் சார்லி மங்கர்.

பங்குச் சந்தை முதலீடு குறித்து இவர் கூறும் உத்திகள் பலதுறைகளில் இருப்போருக்கும் பலவிதமாக உதவக் கூடியவை. அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போமா?

1. சரியான முடிவுகளை எடுக்க உதவும் மன மாதிரிகள் (Mental Models)

பல்துறை சிந்தனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மனமாதிரிகள் என்பதைச் சார்லி மங்கர் குறிப்பிடுகிறார். இதன்படி உளவியல், பொருளாதாரம், வரலாறு மற்றும் கணிதம் போன்ற பல துறைகளைப் புரிந்து கொள்வது சரியான முடிவை எடுக்க உதவும் என்பது அவரது கருத்து. சரியான முடிவை எடுத்து விட்டால் தவறான விளைவுகளுக்கு வாய்ப்பே இல்லை அல்லவா!

2. தலைகீழ்க் கொள்கை

வெற்றிக்கு வழி வகுக்கும் விசயங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் தோல்விக்கான காரணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். இது சார்லி மங்கரின் தலைகீழ்க் கொள்கை எனப்படுகிறது. தலைகீழ் கொள்கையின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் தோல்வியில் சிக்குவதுமில்லை, தோல்வியால் துவளுவதுமில்லை.

3. நீண்ட கால நோக்கு

குறுகிய கால ஆதாயங்களைக் கருத்தில் கொள்ளாமல் நீண்ட காலத்தில் சிறப்பான லாபம் பெற திட்டமிட வேண்டும். முதலீட்டில் பெரிய அளவிலான லாபம் என்பது வாங்குவதிலும் விற்பதிலும் இல்லை. மாறாகப் பொறுமையாகக் காத்திருப்பதில்தான் உள்ளது. பங்குகளில் அடிக்கடி வணிகம் செய்வதை நிறுத்த வேண்டும். முதலீட்டை எந்தத் தொந்தரவும் செய்யாமல் நீண்ட காலத்துக்கு தொடர விட வேண்டும். ஊன்றிய விதையை அடிக்கடி தோண்டிப் பார்த்தால் அது எப்படி முளை விடும்? முளை விடாது அல்லவா? அதுதான் நீண்ட கால முதலீட்டின் தாத்பர்யம்.

4. கவனம் செலுத்த வேண்டிய பங்குகள்

அடிப்படையில் வலுவாக உள்ள மற்றும் போட்டி சார்ந்த பலம் உள்ள நிறுவனப் பங்குகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இதை தவிர்த்து விலையேறிக் கொண்டிருக்கிறது என்பதற்காகவோ, விலையிறங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்காகவோ பங்குகளை வாங்குவதோ, விற்பதோ சூதாட்டத்தில் ஈடுபடுவதற்குச் சமமானது.

5. கட்டுப்படுத்த வேண்டிய உணர்வுகள்

முதலீட்டில் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம் ஆகும். அதீத நம்பிக்கையும் மற்றவர்களைப் பார்த்து ஒன்றைச் செய்வதும் நட்டத்துக்கு வழிவகுக்கும். முதலீட்டைப் பொருத்த வரையில் இங்கு அறிவுக்குத்தான் வேலையே தவிர, உணர்வுகளுக்கு இல்லை.

6. தரத்தில் கவனம்

முதலீடுகளைப் பல நிறுவனங்களில் செய்வதை விட தரமான மற்றும் சரியான சில நிறுவனப் பங்குகளில் செய்தாலே போதுமானது. நிறைய பங்குகளில் முதலீடு செய்தால்தான் நிறைய லாபம் கிடைக்கும் என்பதில்லை. தரமான பங்குகளில் சரியாக முதலீடு செய்தாலேபோதுமானது. அதே நேரத்தில் உங்களுக்கு தெரியாதவற்றில், அறியாதவற்றில் அறவே முதலீடு செய்யவே கூடாது.

7. கூட்டுவட்டியில் மாயாஜாலம்

தேவை இல்லாமல் இடையிடையே முதலீட்டை எடுக்கக் கூடாது. முதலீடு செய்து விட்டு அதை மறந்து விடுவது கூட நல்லதுதான். அப்போதுதான் கூட்டுவட்டியின் மாயாஜாலத்தை உங்கள் முதலீட்டில் காண முடியும். ஏனென்றால் கூட்டுவட்டி என்பது உலகின் எட்டாவது அதிசயம்.

8. எளிய மதிப்பீடு

முதலீடு செய்கின்ற எதுவும் எளிய முறையில் மதிப்பீடு செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவற்றிலேயே முதலீட்டைச் செய்ய வேண்டும். சிக்கலான கணக்கீடுகளைச் செய்து முதலீடு செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. எளிமையே எப்போதும் வலிமையானது.

இவையே சார்லி மங்கரின் சத்தான மற்றும் முத்தான முதலீட்டு உத்திகள்.

மேற்படி சார்லி மங்கரின் முதலீட்டு உத்திகளைப் பயன்படுத்தி முதலீடு செய்தால் பங்குச் சந்தையில் நீங்களும் ஒரு பிதாமகன்தான்.

உங்களுக்கு என் வாழ்த்துகள்!

*****

No comments:

Post a Comment