Tuesday, 29 April 2025

ஏழேழ் ஜென்மத்துக்கும் நிம்மதியாக வாழ ஏழு விதமான ஓய்வுகள்!

ஏழேழ் ஜென்மத்துக்கும் நிம்மதியாக வாழ ஏழு விதமான ஓய்வுகள்!

வேலை செய்வது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வதும் முக்கியம். ஓய்வு என்பது நாம் நினைப்பது போல படுத்து உறங்குவது மட்டுமன்று. படுத்து உறங்குவதும் ஓய்வுதான். ஆனால் ஓய்வில் ஏழு வகைகள் உள்ளன. இந்த ஏழு வகை ஓய்வும் ஒரு மனிதருக்குக் கிடைத்தால்தான் அவரால் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ முடியும். ஏழு வகையான ஓய்வுகள் என்னவென்று பார்ப்போமா?

1. உடல் ஓய்வு :

இது உடலியல் ரீதியான ஓய்வு. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நாளில் குறைந்தபட்சம் எட்டு மணி நேர உறக்கம் தேவை. அது இல்லாவிட்டால் அவரால் ஒவ்வொரு நாளையும் புத்துணர்வோடு அணுக இயலாது.

2. மன ஓய்வு :

எதையாவது சதா யோசித்து யோசித்துக் களைத்துப் போகும் மனதுக்கு ஓய்வு வேண்டும். இல்லையென்றால் மனச்சோர்வு என்பது அதிகமாகிக் கொண்டே போகும். மனதை எப்படி ஓய்வெடுக்கச் செய்வது? உடல்ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதான் மன ஓய்வுக்கான சரியான வழி. யோகா, உடற்பயிற்சி, நடனம் போன்றவை எல்லாம் மன ஓய்வுக்கான மார்க்கங்கள். இவற்றைக் கற்றுக் கொள்ள நேரம் இல்லை என்பவர்கள், நீண்ட தூரம் நடக்கலாம். அது கூட மன ஓய்வுக்கான மார்க்கம்தான். அப்போது மூளையில் டோபமைன் சுரந்து மனம் புத்துணர்வு பெறுகிறது.

3. உணர்வு ஓய்வு :

மனிதர்கள் சதா உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இது ஓர் எல்லையைத் தாண்டும் போது மனிதர்கள் வெடித்துச் சிதறுகிறார்கள். அப்படி ஆகாமல் இருக்க என்ன செய்வது? உணர்வு ரீதியான ஓய்வுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்? எப்படி உணர்வுக்கான ஓய்வை மேற்கொள்வது? பயணங்கள்தான் உணர்வு ஓய்வுக்கான சரியான வழியாகும். அவ்வபோது மேற்கொள்ளும் பயணங்களால் உணர்வுகள் நல்ல ஓய்வைப் பெறும். உணர்வுகள் புத்துணர்ச்சி பெறும்.

4. சமூக ஓய்வு :

எப்போதும் குடும்பத்தோடும், தெரிந்த நண்பர்களோடும் இருப்பதே ஒரு கட்டத்தில் சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விடும். இதை எப்படித் தவிர்ப்பது? இதற்குத்தான் சமூக ஓய்வு தேவைப்படுகிறது. சமூக ஓய்விற்கு என்ன செய்ய வேண்டும்? அவ்வபோது சுற்றுலா செல்லுங்கள். உங்களுக்குத் தெரியாத மனிதர்களோடு ஜாலியாக அரட்டை அடியுங்கள். பலநாட்கள் சந்தித்திராத நண்பர்களைத் தேடிச் சென்று சந்தியுங்கள். வெட்டி அரட்டையும், கேளிக்கையும் அவ்வபோது தேவை. ஆனால், எப்போதும் தேவையல்ல. இதுவே சமூக ஓய்வுக்கான மார்க்கம்.

5. படைப்பு ஓய்வு :

நான் என்ன பெரிய ஓவியரா? அல்லது பெரிய எழுத்தாளரா? என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் எதைச் செய்தாலும் அது படைப்புதான். எழுதியதைப் பார்த்து எழுதுவது கூட ஒரு படைப்புதான். அதனால் எதையாவது புதிததாகச் செய்வது மட்டுமே படைப்பு என்று நினைத்து விடாதீர்கள். அன்றாடம் சமைப்பது கூட படைப்புதான். அதையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு அதன் மேல் சலிப்பும் வெறுப்பும் வந்து விடும். இதற்கு என்ன செய்வது? படைப்புக்கும் ஓய்வு வேண்டும். படைப்புக்கு எப்படி ஓய்வு கொடுப்பது? அன்றாடம் செய்து கொண்டிருப்பதை விடுத்து ஒரு நாள் புதிதாக ஒன்றை முயற்சி செய்யுங்கள். புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் படைப்புக்கான ஓய்வு. ஒரே வேலையைத்தொடர்ந்து செய்யாமல் சுழற்சி முறையில் வேலைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.

6. புலன்களுக்கான ஓய்வு :

இந்த நவீன காலத்தில் புலன்களுக்கான ஓய்வு கட்டாயம் தேவைப்படுகிறது. அதென்ன புலன்களுக்கான ஓய்வு? நீங்கள் சதா சர்வ காலமும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அலைபேசியை நோண்டிக் கொண்டிருக்கிறீர்கள், தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், காதில் இசைக்கேட்புக் கருவியைப் பொருத்திக் கொண்டு பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது அலைபேசியிலோ, கணினியிலோ எதையாவது விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் உங்கள் கண்கள், காதுகள் என்று புலன்கள் சதா சர்வ காலமும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவை அவற்றுக்கு ஒரு களைப்பைக் கொடுக்கின்றன. இதனால்தான் புலன்களுக்கான ஓய்வு என்பது தேவைப்படுகிறது. ஆகவே வாரத்தில் ஒரு நாளாவது அலைபேசியில்லாத நாள், தொலைக்காட்சி பார்க்காத நாள், கணினியைக் கையாளாத நாள் என்று ஓய்வை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இந்த ஓய்வு உங்களை பன்மடங்கு மேம்படுத்தும் என்பதை இந்த ஓய்வை அனுபவித்த பிறகு நன்றாக உணர்வீர்கள்.

7. ஆன்ம ஓய்வு :

பல வித எண்ணங்களால் சீரற்று அலைக்கழிக்கப்படும் மனதுக்கு ஆன்ம ஓய்வு என்பது தேவைப்படுகிறது. தியானம் ஆன்ம ஓய்வுக்கான அற்புதமான வழிமுறையாகும். எதையாவது ஓர் ஒழுங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதை ஒரு மாதம் அல்லது 48 நாட்கள் செய்வது கூட ஆன்ம ஓய்வுக்கான அற்புதமான வழிமுறையாகும். உதாரணத்துக்கு ஒரு பக்க அளவில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நற்பண்புகளை எழுதி வைத்துக் கொண்டு அதை 48 நாட்களுக்குத் தினமும் காலையில் எழுந்தவுடன் சொல்வது உங்கள் மனதுக்கு நல்ல ஆன்ம ஓய்வைக் கொடுக்கும். இது தவிர விரதம் இருப்பது, ஆன்மிகப் பயணம் செல்வது, ஆண்டுக்கு ஒரு முறை புனித யாத்திரை மேற்கொள்வது போன்றவையும் கூட ஆன்ம ஓய்வுகளே.

மேற்படி ஏழு விதமான ஓய்விலும் கவனம் செலுத்தி, இவ்வகை ஓய்வுகளைப் போதுமான அளவில் எடுத்துக் கொண்டால் உங்கள் மனதும் உடலும் ஆன்மாவும் புத்துணர்வோடு இருக்கும். நீங்களும் உங்களை தினந்தோறும் புதிய மனிதராக உணர்வீர்கள்.

ஏழு ஓய்வுகளையும் பெற்று ஏழேழு ஜென்மமும் மகிழ்ச்சியாகவும் நலமாகவும் வளமாகவும் வாழ வாழ்த்துகள்!

*****

No comments:

Post a Comment