Tuesday, 29 April 2025

எம்.பி.க்கள் அனுபவிக்கும் பலன்கள் என்னவென்று அறிவீர்களா?

எம்.பி.க்கள் அனுபவிக்கும் பலன்கள் என்னவென்று அறிவீர்களா?

2023 – 24 ஆம் ஆண்டு பொருளாதாரத் தரவுகளின் படி இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் 1.72 லட்சம் ஆகும். இதுவே மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.க்களின் ஆண்டு வருமானம் 30.48 லட்சம் ஆகும். இது தனிநபர் ஆண்டு வருமானத்தை விட 17 மடங்கு ஆகும்.

விசயம் இத்தோடு முடிந்து விடவில்லை. எம்.பி.க்களின் வருமானத்தை இத்தோடு குறுக்கி விட முடியாது எனக்கும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் நினைப்பது போல அவர்களுக்கான பிற வருமானங்களைக் கணக்கிடவே முடியாது என்பது உண்மைதான் என்றாலும், கணக்கிடக் கூடிய அரசு வழங்கும் சலுகை வருமானங்கள் இருக்கின்றன. அதைப் பார்ப்போம்.

எம்.பி.க்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவம்.

டெல்லியில் அவர்களுக்கு இலவச வீடு அல்லது வீட்டு வாடகைப்படியாக மாதந்தோறும் இரண்டு லட்சம்.

எம்.பி.க்களுக்கு மாதந்தோறும் 5000 யூனிட் இலவச மின்சாரம்.

எம்.பி.க்களுக்கு மாதந்தோறும் 4000 கிலோ லிட்டர் குடிநீர் இலவசம்.

எம்.பி.க்களுக்கு இலவச தொலைபேசி மற்றும் இணைய வசதி.

எம்.பி.க்கள் அவர்களது குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு 34 இலவச விமான பயண வசதி.

எம்.பி.க்களுக்கு தொடர்வண்டியில் முதல் வகுப்பு பிரயாண வசதி எப்போதும் இலவசம். ஆனால் மூத்த குடிமக்களுக்கு தொடர்வண்டிப் பயணச்சீட்டுக் கட்டணத்தில் வழங்கப்படும் சலுகைக் கூட ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு.

தொகுதிக்குள் அவர்கள் சுற்றுப்பயணம் சென்றால் அதற்கான பயணப்படி.

மேசை, நாற்காலி போன்ற பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக 1 லட்சம் ரூபாய்.

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக 25 ஆயிரம் ரூபாய்.

இந்தியாவில் வேறு யாருக்கும் ஓய்வூதியம் உண்டோ இல்லையோ இவர்களுக்கு 31 ஆயிரம் ஓய்வூதியம்.

அதுவே ஒருவர் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி ஆகிய இரண்டு பதவிகளையும் வகித்திருந்தால் இரட்டை ஓய்வூதியம்.

இவ்வளவு சலுகைகள் வழங்கும் நம்முடைய எம்.பி.க்களின் இன்னொரு முகத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய 543 எம்.பி.க்களில் 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். அதாவது 504 பேர் கோடீஸ்வரர்கள். அவர்களுக்குத்தான் இவ்வளவு ஊதிய, ஓய்வூதியப் பயன்களும் அத்துடன் இவ்வளவு சலுகைகளும்.

இவ்வளவையும் வாங்கிக் கொண்டு அவர்கள் அவையில் என்ன செய்கிறார்கள்? ஒன்று தூங்கி வழிகிறார்கள் அல்லது கைபேசியில் நீலப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்னத்தைச் சொல்வது என்கிறீர்களா?

அதுதான் எனக்கும் தெரியவில்லை. யாருக்கும் தெரியவில்லை.

*****

No comments:

Post a Comment