Saturday, 26 April 2025

வினா எழுத்துகள் அறிவோமா?

வினா எழுத்துகள் அறிவோமா?

வினவுவதற்குப் பயன்படும் எழுத்துகள் வினா எழுத்துகள்.

“அவ்வெழுத்துகள் யாவை?” என வினவ உதவும் ‘யாவை’ என்ற வினாச் சொல்லில் இடம் பெறும் முதல் எழுத்தான யா என்பது வினா எழுத்துகளுள் ஒன்று. மற்ற வினா எழுத்துகள் யாவை என்றால், எ, ஏ, ஆ, ஓ என்பன.

ஆக எ, ஏ, ஆ, ஓ, யா ஆகிய ஐந்து எழுத்துகளும் வினா எழுத்துகள் ஆகும்.

அகச்சுட்டு, புறச்சுட்டு என்பது போல சொல்லிருந்து பிரிக்க முடியாத வினா எழுத்துகள் அகவினா எனவும், இரு சொற்களாகப் பிரிக்கக் கூடிய வகையில் வரும் வினா எழுத்துகள் புற வினா எனவும் அழைக்கப்படுகின்ன.

எவன், ஏன், யாது எனும் வினாச்சொற்களில் எ, ஏ, யா எனும் வினா எழுத்துகள் அகவினா ஆகும்.

எப்பையன், யாங்கனம், அவனே, அவனா, அவனோ எனும் வினாச்சொற்களில் இடம் பெறும் எ, யா, ஏ, ஆ, ஓ எனும் வினா எழுத்துகள் புறவினா ஆகும். ஏனெனில் எப்பையன் என்பதை எ + பையன் எனவும், யாங்கனம் என்பதை யாங்கு + அனம் எனவும், அவனே என்பதை அவன் + ஏ எனவும், அவனா என்பதை அவன் + ஆ எனவும், அவனோ என்பதை அவன் + ஓ எனவும் பிரித்து எழுதலாம் என்பதால் புற வினா ஆகும்.

இதனின்று எ, யா எனும் வினா எழுத்துகள் அக வினாவாகவும் புற வினாவாகவும் வரும் எனத் தெளியலாம்.

‘ஏ’ எனும் வினா எழுத்து வினாச்சொல்லின் முதலில் வரும் போது அக வினாவாகவும், வினாச்சொல்லின் இறுதியில் வரும் போது புற வினாவாகவும் வரும் என அறியலாம். ‘ஏ’ வினாச்சொல்லின் இறுதியில் புற வினாவாக வருவது தற்போது வழக்கில் இல்லை.

ஆ, ஓ எனும் வினா ழுத்துகள் வினாச்சொல்லின் இறுதியில் புற வினாவாக வரும்.

சுட்டெழுத்துகளைப் போல வினா எழுத்துகள் ஐம்பாலிலும் வரும்.

எ என்ற வினா எழுத்தை எடுத்துக் கொண்டால்,

எவன்?

எவள்?

எவர்?

எது?

எவை?

என ஐம்பாலிலும் வரும். இது போல மற்ற வினா எழுத்துகளையும் ஐம்பாலிற்கும் எழுதிப் பாருங்களேன்!

*****

No comments:

Post a Comment