Saturday, 25 January 2025

உலகமே உங்களை விரும்ப என்ன செய்ய வேண்டும் தெரியுமா? – ஓர் அருமையான கதை!

உலகமே உங்களை விரும்ப என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

– ஓர் அருமையான கதை!

இந்த உலகம் யாரை விரும்புகிறது தெரியுமா?

கொடுப்பவர்களைத்தான் விரும்புகிறது.

நீங்களும் கொடுப்பவர்களாக இருங்கள். அன்பை, கருணையை, உதவிகளைக் கொடுப்பவர்களாக இருங்கள். உலகம் உங்களையும் விரும்பும்.

இது குறித்த கதை ஒன்றை இன்று அறிவோமா?

அந்தக் கல்லூரி இளைஞன் அன்று வெகு சந்தோசமாக இருந்தான்.

அன்று அவனுக்குப் பிறந்த நாள். அவன் சந்தோசத்துக்குக் காரணம் அவனுக்குப் பிறந்த நாள் என்பது மட்டுமல்ல, அவனுக்குப் பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்ட மகிழ்வுந்தும் காரணம்.

அந்த மகிழ்வுந்தை அந்த இளைஞனின் அண்ணன் பிறந்த நாள் பரிசாக வழங்கி இருந்தான்.

அந்தப் பிறந்த நாள் பரிசோடு அந்த இளைஞன் நண்பர்கள் அனைவரையும் உற்சாகமாகச் சந்தித்துப் பேசினான்.

அவனைக் கண்ட நண்பர்கள் அனைவரும் இப்படி ஓர் அண்ணன் தங்களுக்கு இல்லையே என்று ஏக்கப் பெரு மூச்சு விட்டார்கள்.

அவர்களில் ஒரே ஒரு நண்பன் மட்டும் அந்தக் காரை வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த அந்தக் கல்லூரி இளைஞன், உனக்கும் இப்படி ஓர் அண்ணன் இல்லை என்று ஏங்குகிறாய்தானே என்று கேட்டான்.

அதற்கு அந்த நண்பன், இல்லை நண்பா! இப்படி ஓர் அண்ணனாக என் தம்பிகளுக்கு நான் இல்லையே என்று ஏங்குகிறேன் என்றான்.

ஏக்கம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது அல்லவா!

ஆம்! இந்தக் கதை நமக்கு எவ்வளவு விசயங்களைச் சொல்கிறது. நாம் அனைவரும் பொதுவாகப் பரிசுகளைப் பெறுபவர்களாக இருப்பதையே விரும்புகிறோம். ஆனால் நாம் பரிசுகளைக் கொடுப்பவர்களாக இருப்பதை விரும்ப வேண்டும் என்பதை இந்தக் கதை சொல்கிறது அல்லவா!

ஆகவே, நாம் பெறுபவர்களாக இருப்பதை விட, கொடுப்பவர்களாக இருப்பதை விரும்புவோமே! இந்த உலகை மகிழ்விப்போமே! அனைவரையும் மகிழ்வித்து மகிழ்வோமே!

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment