Wednesday 5 June 2024

எப்படி சேமிப்பது?

 


இப்போதே ஆரம்பியுங்கள்!

சேமிப்பதையும் முதலீடு செய்வதையும் ஒத்தி வைக்காமல் இன்றே, இப்போதே ஆரம்பமிப்பது நல்லது.

ஆடம்பரத்திற்காக எதையும் வாங்காதீர்கள்!

ஒருவரின் வருமானத்திற்கு ஒரு லட்ச மதிப்பில் உள்ள இரு சக்கர வாகனம் போதுமானது என்றால் அவர் இரண்டு லட்ச மதிப்பிற்கு இரு சக்கர வாகனம் வாங்காமல் இருப்பது நல்லது. அப்போதுதான் அவரால் சேமிக்க முடியும். அதைத் தவிர்த்து ஆடம்பரத்திற்காகப் பொருள் வாங்க நினைத்தால் அவரால் சேமிக்க முடியாது. இதே போல தொலைக்காட்சி, அலைபேசி போன்ற பொருட்களை பெருமைக்காக வாங்குவதை விட தேவைக்கேற்ற குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

அநாவசியமாக எதையும் வாங்கிக் குவிக்காதீர்கள்!

உடைகள், அணிகலன்களைப் பயன்பாட்டுக்கு ஏற்ப அளவாக வாங்கிக் கொள்ளலாம்.

தேவை இல்லாமல் எதையும் வாங்கக் கூடாது. தேவைக்கு அதிகமாக எந்த ஒன்றையும் வாங்கி விடக் கூடாது. அடுத்தவர்களைத் திருப்திபடுத்த எந்தச் செலவையும் செய்யக் கூடாது. ஏனெனில் பணப்பிரச்சனை என வரும் போது யாரும் உங்களைக் காப்பாற்ற வர மாட்டார்கள்.

உணர்ச்சிவசப்பட்டு செலவு செய்யாதீர்கள்!

உணர்ச்சிவசப்பட்டு செய்யும் செலவுகளைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள், அலைபேசி, திரையரங்கம், விடுதி உணவு போன்ற செலவினங்களில் கவனமாகவும் அறிவார்ந்த முறையிலும் இருக்க வேண்டும்.

உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருந்தே கூட உடற்பயிற்சி கருவிகளை வாங்கி வைத்துக் கொண்டு செய்யலாம்.

இ.எம்.ஐ.யில் சிக்கிச் சீரழியாதீர்கள்!

மாதந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டப் போகிறோம் என்று நினைத்து நிறைய பொருட்களைத் தவணை முறையில் வாங்கிக் கொண்டே இருந்தால் தவணைத்தொகைக் கட்டுவதற்கே மாத ஊதியம் முழுவதும் செலவாகவும் கூடும். சிறு துளி பெரு வெள்ளம் என்பது சேமிப்பிற்கு மட்டுமல்ல, செலவுக்கும் உண்டு. இதனால் சேமிக்க முடியாமல் போகலாம்.

திட்டமிட்டுச் சேமியுங்கள்!

குழந்தைகளின் கல்வி, குழந்தைகளின் திருமணம், ஓய்வுக்கால பணம் பிரித்துக் கொண்டு இம்மூன்றுக்கும் ஏற்ப நிதி திட்டமிடல் செய்து பணத்தைச் சேமித்து முதலீடு செய்ய வேண்டும்.

வருமானத்தில் ஒரு சிறு பகுதியைச் சேமிக்கத் தொடங்கினால் அது பழக்கமாகி சேமிப்புத் தொகையை அதிகமாக்கிக் கொண்டே வரும்.

அவரச கால நிதி அவசியம்!

அவரசச் செலவுகள் சேமிப்பதைத் தடுத்து விடும். இதற்கென அவசர கால நிதியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவசரச் செலவுகளை அந்த நிதியிலிருந்தே எடுத்துக் கொள்ள வேண்டும்.

சேமிப்பிற்கான மந்திரம்!

“செலவு செய்தது போக, மீதமுள்ளதைச் சேமிக்காதே. சேமித்தது போல மீதமுள்ளதைச் செலவு செய்!” என்ற வாரன் பப்பெட்டின் பொன்மொழியைப் பின்பற்றுவது நல்லது.

பொதுவாக வருமானத்தில் 50 சதவீதத்தை அடிப்படைச் செலவுகளைச் செய்வதற்காகச் செலவழிக்க வேண்டும். 25 சதவீதத்தைச் சேமிக்க வேண்டும். 25 சதவீதத்தை ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள செலவழிக்கலாம்.

பழகி விட்டால் எதுவும் சுலபமே மற்றும் சுபமே!

சேமிக்கும் பழக்கத்தை ஒரே நாளில் உருவாக்கி விட முடியாது. ஒவ்வொரு நாளாக, ஒவ்வொரு மாதமாகக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உருவாக்க வேண்டும். பழகி விட்டால் பிறகு எல்லாம் சுலபம்தான்.

No comments:

Post a Comment