Friday, 7 March 2025

எப்படி தேர்வு செய்வது? – சிந்திக்க வைக்கும் ஒரு கதை!

எப்படி தேர்வு செய்வது? – சிந்திக்க வைக்கும் ஒரு கதை!

வாழ்க்கை என்பது எப்படிப்பட்டது?

நாம் முதலில் அமைவதைத் தேர்வு செய்வதா?

எல்லாவற்றையும் அனுபவம் மூலம் அறிந்து கொண்டு கடைசியில் கிடைப்பதைத் தேர்வு செய்வதா?

இது ஒரு குழப்பமான கேள்விதான் இல்லையா?

இந்தக் கேள்விக்கு இந்தக் கதை விடை தருமா என்று பாருங்கள்.

ஓர் ஆசிரியர் ஒரு மாணவருக்கு ஒரு சோதனை வைத்தார்.

கொய்யாப்பழங்கள் நிறைந்த தோட்டத்தில் அவனை அனுப்பினார். அவன் பார்ப்பதில் பெரிய பழம் ஒன்றைப் பறிந்து வரச் சொன்னார். அத்துடன் சில நிபந்தனைகளையும் விதித்தார். அவன் பழங்களைப் பார்த்துக் கொண்டே செல்லலாம். ஆனால் சென்ற வழியில் திரும்பக் கூடாது. ஒரு முறை ஒரு பழத்தைப் பறித்த பின் மீண்டும் வேறொரு பழத்தைப் பறிக்கக் கூடாது. ஒரு முறை, ஒரே முறைதான் பறிக்க வேண்டும்.

அந்த மாணவன் தோட்டத்தில் நுழைந்ததுமே மிகப்பெரிய கொய்யாப்பழத்தைப் பார்த்தான். இருப்பினும் இதை விட பெரிய பழங்கள் இருக்கலாம் என்று மேலும் சென்றான். அவன் நினைத்தபடியே பெரிய பழங்கள் இருந்தன. இன்னும் சென்றால் மேலும் பெரிய பழங்களைப் பார்க்கலாம், பறிக்கலாம் என்ற நினைப்பில் அவன் மேலும் சென்றான். ஆனால் அதன் பிறகு அவன் பார்த்ததெல்லாம் சிறிய பழங்கள்தான். அவன் சென்ற வழியில் திரும்பக் கூடாதே. அதனால் வேறு வழியில்லாமல் இருப்பதில் சுமாரான பழம் ஒன்றைப் பறித்துக் கொண்டு திரும்பினான்.

இப்போது அவனது ஆசிரியர் கேட்டார், நீ பார்த்ததிலேயே மிகப் பெரிய பழம் இதுதானா?

அந்த மாணவன் இல்லை என்று தன்னுடைய அனுபவத்தைக் கூறினான்.

இப்போது அதே நிபந்தனையோடு அந்த மாணவனை ஒரு மாம்பழத் தோட்டத்திற்குள் அனுப்பினார்.

முந்தைய அனுபவம் காரணமாக அந்த மாணவன் முதலில் ஒரு பெரிய மாம்பழத்தைப் பார்த்ததும் அதைப் பறித்துக் கொண்டான். அவன் தொடர்ந்து செல்ல செல்ல அவன் பறித்ததை விட மிகப் பெரிய பழங்களைப் பார்க்க நேர்ந்தது. ஒரு முறை பழத்தைப் பறித்து விட்டால் மீண்டும் வேறொரு பழத்தைப் பறிக்கக் கூடாது அல்லவா. அதனால் அவன் முதலில் பறித்த மாம்பழத்தோடு ஆசிரியரைச் சந்தித்தான்.

இப்போது ஆசிரியர் கேட்டார், நீ பார்த்ததிலேயே பெரிய பழம் இதுதானா?

அந்த மாணவன் இல்லை என்று தன்னுடைய அனுபவத்தைக் கூறினான்.

வாழ்க்கையும் இது போன்ற நிபந்தனையுடன் கூடிய பயணம்தானே. காலத்தில் எப்படி நீங்கள் பின்னோக்கி திரும்புவீர்கள். சிலவற்றை ஒரு முறை தேர்ந்தெடுத்து விட்டால் மீண்டும் தேர்ந்தெடுக்க முடியாமல் போய் விடுகிறதுதானே.

இருப்பதில் சிறந்ததைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு எப்போதும் வாழ்க்கையில் வருகிறது. பிறகு அதை விட சிறந்த வாய்ப்புகளும் வருகின்றன. ஆனால் காலத்தில் பின்னோக்கிச் சென்று ஒப்பிட்டுப் பார்த்து எந்த ஒரு வாய்ப்பையும் மாற்றி தேர்ந்தெடுக்க முடியாது. காலம் என்பது ஒரு வழி பயணத்திற்கான பாதையாக அல்லவா இருக்கிறது.

சில நேரங்களில் உங்கள் தேர்ந்தெடுப்பு வெகு சிறப்பாகவும் அமையலாம். சில நேரங்களில் வெகு சுமாராகவும் அமையலாம்.

இதை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்.

யோசித்துச் சொல்லுங்களேன்.

இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி.

வணக்கம்.

*****

No comments:

Post a Comment