Sunday, 28 June 2026

ஆவிகளுக்குக் கன்சல்டிங் ஆபீஸ் நடத்திய கிரேக்கர்கள்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 5

ஆவிகளுக்குக் கன்சல்டிங் ஆபீஸ் நடத்திய கிரேக்கர்கள்

இன்றைக்குச் சுமார் 2800 வருஷங்களுக்கு முன்னால். அதாவது கிமு எட்டாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் ஹோமர் என்றொரு கண் தெரியாத கவிஞர் வாழ்ந்து வந்தார்.

திடீரென ஹோமரை அட்ரஸ் தேடி விசாரிக்கக் காரணம், அமானுஷ்யங்களுக்கு அவரும் ஓர் அட்ரஸ் தருகிறார்.

அவர் எழுதிய இரண்டு மெகா சீரியல் காவியங்கள்தான் இலியட் மற்றும் ஒடிஸி. இன்றைக்கு நாம் பார்க்கும் கேம் ஆப் த்ரோன்ஸ் கதைகளுக்கெல்லாம் தாத்தா இது. அந்த வகையில் ஹோமர் தான் உலகின் முதல் பெஸ்ட் செல்லிங் த்ரில்லர் எழுத்தாளர்!

அவருடைய கதைகளில் வரும் பேய்கள், நம் ஊர் ரத்தக் காட்டேரிகள் போல மரத்தில் தலைகீழாகத் தொங்குபவை அல்ல. அவை மிகவும் விசித்திரமானவை.

ஹோமரின் உலகத்தில் மனிதன் இறந்துவிட்டால் நேராக ஹேடிஸ் எனப்படும் பாதாள உலகத்திற்குப் போய்விடுவான். அங்கே போனவர்கள் எல்லாரும் வெறும் நிழல் உருவங்கள் ஆகி விடுவார்கள்.

அவர்களுக்கு உருவம் இருக்கும், ஆனால் எடை இருக்காது. தொட நினைத்தால் காற்று போலக் கலைந்துவிடுவார்கள். எல்லாவற்றையும் விடக் கொடுமை, அவர்களுக்குப் பழைய நினைவுகள் எதுவுமே இருக்காது. ஒரு வகையான மெமரி வைப் செய்யப்பட்ட ரோபோக்கள் போல அலைந்து கொண்டிருப்பார்கள்.

இந்த ஆவிகள் எப்படி நடமாடும் தெரியுமா?

ஹோமர் ஒரு சூப்பர் கற்பனையைச் சொல்கிறார். அவை சாதாரணமாகப் பேசாது. குகைக்குள் கூட்டமாக இருக்கும் வௌவால்கள் எப்படி கீச் கீச் என்று சத்தமிடுமோ, அப்படித்தான் இந்த ஆவிகளும் சத்தமிடுமாம்!

சரி, இந்த வௌவால் பேய்களிடம் எப்படிப் பேசுவது?

அதற்கு ஹோமர் ஒரு பயோ கெமிக்கல் ஐடியா வைத்திருந்தார்.

ஒடிஸி கதையின் ஹீரோவான ஒடிஸியஸ், தன் எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள பாதாள உலகத்திற்குப் போவான்.

அங்கே இருக்கும் ஆவிகளிடம் அவன் எப்படிப் பேசுவான் தெரியுமா?

இப்படியெல்லாம் இடையில் கேள்வி கேட்காமல் பதில் சொல் என்கிறீர்களா?

ஒரு சிறிய குழி தோண்டி, அதில் ஆடு மாடுகளைப் பலியிடுவான். ரத்தம் குழியில் தேங்கியதும், பேய்கள் கூட்டம் கூட்டமாக வௌவால்கள் போலக் கத்திக்கொண்டே ஓடி வரும். அந்த ரத்தத்தை ஒரு சொட்டு குடித்த உடனே, ஆவிகளின் மெமரி கார்டு வேலை செய்யத் தொடங்கும்! தங்களின் பழைய நினைவுகள் திரும்பி, மனிதக் குரலில் பேச ஆரம்பிக்கும்.

அதாவது, ரத்தம் என்பது அந்தப் பேய்களுக்கான ஒரு ரீசார்ஜ் கூப்பன் போலச் செயல்பட்டது. ரத்தம் குடித்தால் தான் பேச முடியும், இல்லையென்றால் மீண்டும் வௌவால் மோட் தான்!

இரத்தம் குடிச்ச உடனே பேய்க்கு மெமரி வருமா? இது என்ன விஜயராமா இப்படிப் பொளந்து கட்டுகிறாய் என்கிறீர்களா?

விசயம் இருக்கிறது.

அன்றைய மனிதனுக்கு உயிர் என்பது ரத்தத்தில் தான் இருக்கிறது என்று ஓர் எண்ணம் இருந்தது. உடலில் இருந்து ரத்தம் வெளியேறினால் மனிதன் இறந்து விடுவான் இல்லையா? அப்படியானால், இறந்த ஆவிகளுக்குக் கொஞ்சம் ரத்தத்தைக் கொடுத்தால், தற்காலிகமாக உயிர் பெற்றுப் பேசும் என்று நம்பினார் ஹோமர். அதுதான் விசயம்.

இன்றைக்கு நாம் த்ரில்லர் படங்களில் பார்க்கும் வாம்பயர் கதைகளுக்கு வித்திட்டதே 2800 வருடங்களுக்கு முன்பு ஹோமர் எழுதிய இந்த இரத்த நுகரும் வௌவால் பேய்கள்தான்.

தொழில்நுட்பம் வளராத அந்தக் காலத்திலேயே, மனித மூளை எவ்வளவு பிரமாதமாகத் த்ரில்லர் காட்சிகளைக் கிராபிக்ஸ் செய்து பார்த்திருக்கிறது பார்த்தீர்களா?

கிரேக்கத்தைப் பார்க்க வந்து அவர்களில் ஒருவரான ஹோமரைப் பிடித்து அமானுஷ்யத்திற்கு அட்ரஸ் கேட்டுக் கொண்டிருந்த நமக்குக் கிரேக்கர்களின் அமானுஷ்ய அட்ரஸ்கள் இன்னும் வேண்டுமென்றால் அவைதான் இவை.

கிரேக்கர்களுக்குப் பேய்கள் மேல் எவ்வளவு பயம் இருந்ததோ, அவ்வளவு நக்கலும் இருந்தது. திடீரென்று வீட்டில் அமானுஷ்ய நடமாட்டம் தெரிந்தால், அவர்கள் பேய்களை ஓட்டப் பயன்படுத்திய ஒரு வழிமுறை என்ன தெரியுமா?

சத்தமாகச் சிரிப்பது மற்றும் கெட்ட வார்த்தைகளால் திட்டுவது!

பேய்கள் என்பவை மிகவும் சீரியஸான, ஈகோ பிடித்த கேரக்டர்கள் என்பதால், நாம் சத்தமாகச் சிரித்தாலோ அல்லது அசிங்கமாகத் திட்டினாலோ, "இவன் நமக்கு மரியாதை தரமாட்டான்" என்று அபசெட் ஆகி ஓடிவிடுமாம்! என்ன ஒரு கிரேக்க ஐடியா பாருங்கள்.

யாருக்காவது பேய் பிடித்திருந்தால் இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகிறதா என்று செக் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இந்நேரம் உங்களுக்கு வந்து விட்டதுதானே?

உலகெங்கும் இப்படி ஆவி மேட்டர்கள் எல்லாம் உட்டாலக்கடி காமெடிகளாத்தான் இருக்கின்றன. அதனால்தான் தமிழ் சினிமாக்கள் பேய்களை வைத்தும் காமெடிப் படங்களாகச் சுட்டுத் தள்ளுகின்றன போலும்.

அப்புறம், எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று கேட்க அன்று கிரீஸில் ஒரு அமானுஷ்ய ஆபீஸே இருந்தது. அதன் பெயர் நெக்ரோமண்டியோ அதாவது மரணத்தின் கோவில்.

அங்கே போனால், உங்களை உடனே பேய்களிடம் கூட்டிப் போக மாட்டார்கள். முதலில் ஓர் இருட்டறையில் அடைப்பார்கள். சில குறிப்பிட்ட மூலிகைகளையும், பன்றி இறைச்சியையும் சாப்பிடக் கொடுப்பார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு, ஒரு சுரங்கப் பாதை வழியாக உங்களை நிலவறைக்குக் கூட்டிப் போவார்கள். அங்கே அடர்ந்த புகைக்கு நடுவே, இறந்த உங்களின் உறவினர்களின் ஆவிகள் காற்றில் மிதந்து வந்து உங்களிடம் பேசும்!

நிஜமாகவா என்கிறீர்களா?

விசயம் இதுதான். அந்தக் கோவிலின் நிலவறையில் பிரம்மாண்டமான இரும்பு கியர்களும், கப்பி அமைப்புகளும் இருந்தன. ஆவிகள் என்று நம்பப்பட்டவை, உண்மையில் பூசாரிகள் மேலே இருந்து கயிறுகள் மூலம் இறக்கிய மரப்பொம்மைகள்! அன்றைய அமானுஷ்யத்தின் பின்னால் இருந்த பியூர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அது. இப்படியெல்லாம் ஆவிகள் என்று காதில் பூ சுத்த இன்ஜினியரிங் மேட்டர்களைப் பயன்படுத்தியதுதான் கிரேக்கம்.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment