Monday 24 October 2022

PPF – வரி சேமிப்போடு கூடிய அருமையான முதலீடு திட்டம்

PPF – வரி சேமிப்போடு கூடிய அருமையான முதலீடு திட்டம்

PPF என்பது Public Provident Fund என்பதன் சுருக்கம் ஆகும்.

வரி சேமிப்புக்கும் உதவ வேண்டும், அது முதலீடாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பெரும்பயன் பெறலாம்.

PPF இல் செய்யப்படும் முதலீடுகளை 80C இன் கீழ் வருமான வரிச் சலுகையில் கழித்துக் கொள்ளலாம்.

1968 இல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் நம்பிக்கையான பாரம்பரியமான முதலீட்டுத் திட்டமாகக் கருதப்படுகிறது. முதலீட்டு அபாயங்கள் ஏதும் இல்லாத திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் தொகையை வேறு எவரும் உரிமைத்தொகையாகக் கோர முடியாது என்பதோடு, நட்டத்திற்கு ஈடாக வழங்குமாறு நீதிமன்றத்தாலும் உத்தரவிட முடியாது என்பதிலிருந்தே இத்திட்டத்தின் முதலீட்டுப் பாதுகாப்பை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இந்திய குடிமகனாக உள்ள எவரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

இத்திட்டம் 15 ஆண்டு காலம் முதலீட்டுக் காலத்தைக் கொண்டது.

மாதா மாதம் அல்லது ஆண்டுதோறும் என்று வசதிக்கேற்றாற் போல் முதலீடு செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தில் ஒவ்வோராண்டிலும் குறைந்தபட்சம் ரூ. 500/- முதலீடு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் கணக்கு முடங்கி விடும். பிறகு ரூ. 50/- அபராதம் செலுத்தி முடங்கிய கணக்கை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டியிருக்கும்.

ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஒவ்வொராண்டிலும் அதிகபட்சமாகச் செய்யும் ரூ. 1.5 லட்ச முதலீட்டை நீங்கள் எத்தனைத் தவணைகளாக வேண்டுமானாலும் பிரித்துக் கட்டலாம். ஒரே தவணையாகவும் கட்டலாம். அல்லது மாதந்தோறும் ரூ. 12,500/- என மாதாந்திர தவணைப் போலப் பிரித்துத் திட்டமிட்டுக் கொண்டும் கட்டலாம்.

இத்திட்டத்தில் முதலீடு செய்யும் நீங்கள் இத்திட்டத்தின் அற்புதமான விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதிகபட்சமாக நீங்கள் ஆண்டுதோறும் ரூ. 1.5 லட்சம் முதலீடு செய்தால் 12 வது ஆண்டிலிருந்து கிடைக்கும் வட்டி மட்டும் 1.5 லட்சமாக அமையும்.

இத்திட்டத்தின் முதலீடு காலம் 15 ஆண்டுகள் எனினும் 15 ஆண்டுகளுக்குப் பின் வெளியேறாமல் தொடர்ந்தும் கட்டலாம். அப்படி ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்ச தொகையான ரூ. 1.5 லட்சத்தை 25 ஆண்டுகள் கட்டினால் முடிவில் ஒரு கோடி சேர்ந்திருக்கும்.

இத்திட்டத்தில் சேரலாம் என்று நீங்கள் முடிவெடுத்து விட்டீர்கள்தானே?

இத்திட்டத்தில் சேர கடவுச்சீட்டு அளவுள்ள இரண்டு புகைப்படங்கள், ஆதார் அட்டை, பான் அட்டை போதுமானது.

தபால் அலுவலகம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஆக்சிஸ் பேங்க் போன்ற உங்களுக்கு விருப்பமான ஒன்றில் நீங்கள் இதற்கான கணக்கைத் துவங்கலாம்.

தபால் அலுவலகம், அரசுத்துறை வங்கி, தனியார் துறை வங்கி என்று எங்கு துவங்கினாலும் இது மத்திய அரசின் திட்டமாகும் என்பதால் மேற்குறிப்பிட்ட யாது ஒன்றிலும் நீங்கள் அச்சமின்றி இக்கணக்கைத் துவங்கிப் பணத்தைச் செலுத்தலாம்.

மைனர் பெயரில் துவக்குவது என்றால் மேற்கண்ட ஆவணங்களோடு பிறப்புச் சான்றிதழ் போதுமானது.

இத்திட்டத்தில் சேர்ந்த உங்களுக்கு மூன்றாவது ஆண்டிலிருந்து கடன் பெறும் வசதி உண்டு. இதற்கு பி.பி.எப். வட்டி வீதத்தை விட 2 சதவீதம் வட்டி அதிகம். இக்கடனை 36 மாதங்களில் கட்டி முடித்து விட வேண்டும்.

ஏழாவது ஆண்டிலிருந்து அதிகபட்சம் 50 சதவீதம் வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் அவ்வாறு எடுக்காமல் இருப்பதே உங்கள் முதலீடு மென்மேலும் வளர்வதற்கு உசிதமானது.

5 ஆண்டுகள் கழிந்த பிறகு அதாவது 15 ஆண்டுகளுக்கு முன் பணத்தை எடுக்க விரும்பினால் 1 சதவீதம் அபராதம் உண்டு. நல்ல முதலீடாக இத்திட்டத்தைத் தொடர விரும்புவர்கள் அவ்வாறு எடுக்காமல் இருப்பதே நல்லது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இத்திட்டத்தில் ஆண்டுக்கொரு முறை மார்ச் 31 இல் வட்டி கணக்கில் சேர்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கும் முதலீடு செய்வதற்கும் தபால் அலுவகத்தையோ அல்லது மேற்குறிப்பிட்டிருக்கும் வங்கிகளையோ நீங்கள் நாடலாம்.

முதலீடு குறிப்பிட்ட இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். மேலும் முதலீடு குறித்து வேறென்ன தகவல்கள் தேவை என்பதையும் பதிவு செய்யுங்கள். உங்களுக்குப் பயனுள்ள முறையில் வழங்க இவ்வலைப்பூ காத்திருக்கிறது.

*****

No comments:

Post a Comment